திருப்பூர் மாநகரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட செவந்தபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரணையில் அவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த இளைஞர்கள் என தெரிய வந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் வங்காளதேசத்தை சேர்ந்த பாரி டோல் இஸ்லாம், ரிடோய் ஹீசைன் ரிபோட், சிமூள் ரகுமான், ரே கான் ஆகிய நால்வரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் திருமுருகன்பூண்டி பகுதியில் மேற்கு வங்க முகவரியுடன் போலி ஆதார் கார்டு வைத்திருந்த 5 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.