• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவிலில் நள்ளிரவில் சுற்றித்திரிந்த மர்ம நபர்;

ByKalamegam Viswanathan

Jan 27, 2024

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் மேற்கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் தைப்பூசம் முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பள்ளியறை பூஜை முடிந்த பின்பு இரவு 9:30 மணிக்கு மேல் அனைத்து நடைகளும் சாத்தப்பட்டு இறுதியில் மூன்று பெரிய கதவுகளும் அடைக்கப்படும். இரவு காவலராக முன்னாள் ராணுவத்தை சேர்ந்த முருகன் பணிபுரிந்து வருகிறார். அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் தங்கி வருகிறார்.

அதன்படி நேற்று இரவு பூஜை முடிந்த பின்பு நடைகள் சாத்தப்பட்டு இரவு காவலர் முருகன் பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் கோவில் வளாகத்திற்குள் சுற்றி திரிந்துள்ளார்.

அதிகாலையில் கோவில் அறநிலைத்துறை ஊழியர்கள் நடை திறக்க வந்தபோது அந்த மர்ம நபர் தப்பிக்க முற்பட்டார். அப்போது அங்கு இருந்த கோவில் ஊழியர்கள் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் மர்ம நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மர்மநபர் கோவிலில் ஏதேனும் சமூக விரோத செயலில் ஈடுபட வந்தாரா, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக வந்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மதுரை திருநகர் நெல்லையப்பபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் மணி (வயது 45) குடும்ப கஷ்டத்திற்காக திருட வந்தது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு மனைவி மற்றும் மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் மைக்செட் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.