இந்தியாவில் 600 சட்டவிரோத லோன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி நிர்வாகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக லோன் வழங்கும் செயலிகளின் பயன்பாடு மற்றும் அதன் மீதான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இன்றைய இளம் தலைமுறையினர் எதனையும் எதிர்கொள்ளாமல் தேவையற்ற செலவினங்களுக்காக கூட இந்த செயலிகள் மூலம் கடன் பெறுகின்றனர். எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக லோன் வழங்கும் செயலிகள் பின்னர் முழுதாக லோன் பணத்தை கட்டினாலும் கூட மேலும் பணம் கட்ட சொல்லி கட்டாயப்படுத்துவதுவதாக புகார் உள்ளது. கடன் வாங்கியவர் மட்டுமல்லாமல் அவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு தவறான செய்திகளை அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த போலி லோன் கும்பலால் சில தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் சட்டவிரோத பணக்கடன் வழங்கும் செயலிகள் தற்போது அதிகம் செயல்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் 600க்கும் அதிகமான சட்டவிரோத லோன் செயலிகள் செயல்பட்டு வருகின்றன. இவை மக்களை எளிய விதத்தில் ஏமாற்றும் வகையில் பல ஆப் ஸ்டோர்களிலும் கிடைக்கின்றன. லோன் குறித்த வார்த்தைகளை இணையத்தில் தேடினால் ஆயிரத்திற்கும் அதிகமான செயலிகள் காட்டப்படுகிறது.
டிஜிட்டல் லெண்டிங் ஆப்ஸ் (டிஎல்ஏ) தொடர்பான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தீர்க்க, தற்போது சாசெட் என்ற ஒரு தனி போர்ட்டலை அமைத்துள்ளோம் . இந்த போர்டல் மீது ஏராளமான புகார்கள் தற்போது வந்துள்ளன. பெரும்பாலான புகார்கள் முறையாக பதிவுசெய்யப்படாத அமைப்புகள் மற்றும் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படாத நிறுவனங்களால் நிகழ்கின்றன . ஜனவரி 2020 முதல் மார்ச் 2021 வரை சுமார் 2562 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது .