திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் பத்திரிகையாளர் நேசபிரபுவின் உடல் நலன் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ,
‘நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பல்லடம் தாலுக்கா செய்தியாளர் நேசபிரபு நேற்று இரவு ஒரு சில நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலன் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக ஆறுதலான செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய சரவணன் மற்றும் இன்னொருவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் மன வருத்தம் அடைந்துள்ளார். முதல்வரின் உத்தரவின்படி பத்திரிகையாளர் நல வாரியத்தின் மூலம் 3 லட்ச ரூபாய்க்கான காசோலை நேரடியாக வழங்கப்படுகிறது.
தாக்கப்பட்ட பத்திரிக்கையாளருக்கான முழு மருத்துவ செலவையும் அரசு ஏற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், முதல்கட்டமாக நல வாரியம் மூலம் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனை அடுத்து முதலமைச்சர் அறிவித்த 3 லட்சம் ரூபாய் காசோலையை நேசபிரபுவின் தாய், தந்தையரை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து அதிகாரிகள் வழங்க உள்ளனர்.