மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பாதுகாப்பு படை உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இன்று இரவு கோவை மாநகரில் உள்ள நேவல் ஆபீஸர் மெஸ் வளாகத்தில் தங்குகிறார்.
மத்திய அமைச்சரின் மனைவி திருமதி.சாவித்திரி சிங் (வயது 72) உடல் நலக்குறைவு காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரோடு மத்திய அமைச்சரின் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக உடன் இருந்து கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக மத்திய அமைச்சர் கோயம்புத்தூர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூர் மாநகரில் காவல்துறையினரின் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.