ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (12/02/2025) கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார். அவருடன் தன்னார்வலர் சரவணன் உடனிருந்தார்.
மஹாசிவராத்திரி
நம் பாரத ஆன்மீக மரபில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மஹாசிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே மனிதர்களின் உயிர் சக்தி மேல்நோக்கி எழுவதற்கு உதவும் வகையில் இருக்கின்றது.

இந்த ஆன்மீக சாத்தியத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நம் கலாச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மஹாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஈஷா மஹாசிவராத்திரி 2026
அந்த வகையில் ஈஷாவில் 32-ஆவது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 15-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொது மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு வரும் 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது.
ஆதியோகி முன்பு சத்குருவுடன் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம் மற்றும் தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
மஹாசிவராத்திரி இரவு முழுவதும் தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவி வளாகங்கள் பொது மக்களின் தரிசனத்திற்கு திறந்து இருக்கும்.
தியானலிங்கத்திற்கு பொது மக்கள் தங்களின் கைகளாலேயே அபிஷேகமும் செய்ய முடியும்.
யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம்
இந்தாண்டு மஹாசிவராத்திரி அன்று, முதன்முறையாக, சத்குரு ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் யோகேஷ்வர லிங்கத்திற்கு ‘மஹா அபிஷேகம்’ எனும் ஆன்மீக செயல்முறையை அர்ப்பணிக்க உள்ளார்.
யோகேஷ்வர லிங்கத்தின் அருளை பெரும் வகையில் குறிப்பிட்ட மந்திர உச்சாடனங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளுடன் இந்த அபிஷேக செயல்முறை நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் தளத்தில் தேவையான தகவல்களை பதிவு செய்து பொது மக்கள் இந்த மஹா அபிஷேகத்தில் இலவசமாக பங்கேற்க முடியும்.
ஈஷா மஹாசிவராத்திரி விழாவின் மிக முக்கிய அம்சமாக நள்ளிரவு சந்தியா மற்றும் பிரம்மமுகூர்த்த நேரங்களில் சக்திமிகுந்த தியானங்கள் சத்குருவால் வழிநடத்தப்பட உள்ளன.
கலை நிகழ்ச்சிகள்
இவ்விழாவில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையிலும், நம் பாரத பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை வடிவங்களை வெளிப்படுத்தும் வகையிலும் இரவு முழுவதும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ராப் இசைக்கலைஞர் பிளேஸ், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் ஆதித்யா காத்வி, மகாராஷ்டிராவை சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் பிரசாந்த் சோனாக்ரா மற்றும் குழுவினர், ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறக் கலைஞர் ஸ்வரூப் கான், ராப் இசைக்கலைஞர் பாரடாக்ஸ் மற்றும் சவுண்டஸ் ஆப் ஈஷா குழுவுடன் இணைந்து பாடகர்கள் சுவாகத் ரத்தோடு, பிருத்வி காந்தர்வ் ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.
இதனுடன் ‘புராஜக்ட் சம்ஸ்கிருதி’ குழுவின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சியும், ஈஷா சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களின் தேவார பண்ணிசை மற்றும் களரிப்பயட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
ஏற்பாடுகள் தீவிரம்..
மஹாசிவராத்திரி விழாவிற்கு நேரில் வரும் மக்களின் வசதிக்காக தேவையான பார்கிங், சுத்திகரிக்கப்பட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், உடனடி மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இவ்விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தரவுள்ளனர், இருப்பினும் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இலவச இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் விழாவிற்கு முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹாஅன்னதானம் வழங்கப்பட உள்ளது.
நேரலை
மஹாசிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோவில்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது.
இதனுடன் தமிழ், மலையாளம், ஓடியா, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 10 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 13 அயல் மொழிகள் என மொத்தம் 23 மொழிகளில் ஈஷா மஹாசிவராத்திரி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
யக் ஷா 2026
இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களைப் போற்றும் விதமாக, மஹாசிவராத்திரிக்கு முன்னதாக மூன்று நாட்கள் ஈஷாவில் யக் ஷா எனும் இசை மற்றும் நடனத் திருவிழா நடைபெறும்.
அந்த வகையில் ஈஷா யோகா மையத்தில் யக் ஷா 2026 பிப்.12 முதல் 14 வரை தினசரி மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. பிப்ரவரி 12 அன்று புர்பாயன் சாட்டர்ஜியின் சிதார் இசை நிகழ்ச்சியும், 13 அன்று பாரத் சுந்தரின் கர்நாடக சங்கீதமும், 14 அன்று வைபவ் அரேகரின் பரதநாட்டியமும் நடைபெற உள்ளன. ஈஷா மைய வளாகத்தில் சூர்ய குண்ட மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்குபெறலாம் அனுமதி இலவசம்.










