அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணமாக உள்ளது என்றார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் காலத்திலிருந்து தொடர்ந்து செயல்படும் அதிமுக தொண்டர்களின் ஆழ்மனதில், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஆவலாக இருக்கிறது. இந்த இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி எல்லாமே தொண்டர்கள்தான்.
அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வலிமையுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எண்ணம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் போன்று மீண்டும் வராதா என்ற எண்ணம் மக்களிடமும் உள்ளது. நம்மை அரசியலில் யாரும் எதிர்க்க ஆளில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு இந்தத் திருமண விழா பிள்ளையார் சுழி போட்டுள்ளது என்றார் பன்னீர்செல்வம்.
இந்த விழாவில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..