எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பொதுப்பிரிவினருக்கு இன்று ஆன்லைனில் தொடங்கியது.
தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வு பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும்!தமிழகத்தை பொறுத்தவரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 27ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி ஆணையை பெற்றனர். அதேபோல் 28ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 541 மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான ஆணை அளிக்கப்பட்டது.
பொது கலந்தாய்வை பொறுத்தவரையில் அதிக அளவில் மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முதல் முறையாக இணையத்தளத்தில் கலந்தாய்வு நடத்த அரசு முடிவெடுத்தது. அதன்படி இன்று இணையவழி கலந்தாய்வு இன்றுமுதல் தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க பத்தாயிரம் பேர் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.வருகிற 7ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். பிப்ரவரி 10ம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
15ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியிடப்படும் நிலையில், 16ஆம் தேதி கலந்தாய்வு தொடர்பான முடிவுகளை இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதைத்தொடர்ந்து 17ஆம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை பிற்பகல் 3 மணிக்குள் கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.