விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜய கரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டதில் பணிகள் முழுமையாக முடிந்த எட்டு குழிகள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான சுடுமண் முத்திரைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்கள், தீப விளக்குகள், சூது பவளமணி, செவ்வந்திகல் உட்பட 3,350 க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. அதில் கூடுதலாக சுடு மண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மையின் உடைந்த கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல்லின் உடைந்த பாகம் ஆகியவை கிடைத்துள்ளன. இதில் பளிங்கு கல்லை ஆபரணங்களை மெருகூட்டுவதற்கான மூலப் பொருளாக பயன்படுத்தி இருக்கலாம் என அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். மேலும் கிடைத்த பொருட்களை உடனுக்குடன் ஆவணப்படுத்தும் பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.