மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த புகாரில் 47 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை ஆவினில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் என மொத்தம் 61 பணியிடங்களுக்கு கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் எழுத்து தேர்வு , நேர்காணல் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்கு தகுதியில்லாத நபர்களுக்கு பணி வழங்கியது ,எழுத்துத் தேர்வு வினாத்தாள் வெளியானது , தகுதியானவர்களை நேர்காணல் அழைக்காதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து 2020, 2021ம் ஆண்டுகளில் மதுரை ஆவினில் நியமனம் செய்யப்பட்ட நபர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பணி நியமன ஆணைகள் , கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் ஆஜராகுமாறு கடந்த ஆண்டு மே மாதம் பால்வளத் துறை துணைப் பதிவாளர் கணேசன் சம்மன் அனுப்பியிருந்தார். இந்நிலையில் மதுரை ஆவின் நிறுவனத்தில் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த 47 பேரையும் பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.