

போடி அருகே சிறைக்காடு மலைக் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த மலைவாழ் பெண்ணிற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலம் வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தை அடுத்துள்ளது, சிறைக்காடு என்றழைக்கப்படும் மலைக் கிராமம். மலை வாழ் மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இருந்து இன்று (பிப்.28) இரவு 9:00 மணிக்கு மேல் 108 க்கு அவசர உதவிக்கு ஒரு அழைப்பு வந்தது. நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியில் துடிப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சில மலை பகுதியில் இருந்து சிறைக்காடு நோக்கி 108 ஆம்புலன்ஸ் சீறிப் பாய்ந்து, சம்பவ இடத்திற்கு சென்றது. அங்கு பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த பரமன் மனைவி ஈஸ்வரிக்கு (32), தேவையான மருத்துவ உதவிகளை மருத்துவ உதவியாளர் விஜய், பைலட் (ஒட்டுனர்) கார்த்திக் ஆகியோர் செய்தனர். பின்னர் ஈஸ்வரியை ஆம்புலன்சில் ஏற்ற முயன்றனர். அதற்குள் வலி மேலும் அதிகரிக்க துவங்கியதையடுத்து, ஈஸ்வரிக்கு வீட்டிலேயே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சில மலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மனிதநேய மிக்க ஆம்புலன்ஸ் ஊழியர்களின் இச்சேவையை சிறைக்காடு மலை வாழ் மக்கள் மனதார பாராட்டி மகிழ்ந்தனர்.
