மதுரை அருகே நெடுமதுரை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் மகாகும்பாபிஷேகம் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில்., ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நெடுமதுரை கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலான மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்பதால் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பெரியோர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் நிகழும் சுபஸ்ரீ மங்களகரமான ஸ்ரீ சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று துவாதசி திதியும் ரேவதி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 8:45 மணி முதல் 9.40 மணிக்குள் தனுசு லக்னத்தில் அருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோவிலில் அய்யனார் குதிரை மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. அப்போது கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு பூஜிக்கப்பட்ட நீரை கோவில் கலசத்தில் ஊற்றி சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர்.
முன்னதாக நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை யாகசாலை பூஜையில் வைத்து பூஜை செய்தனர். அதேபோல் சுவாமிக்கு 16 வகையான அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. இன்று காலை கோபூஜையுடன் நான்காம் காலயாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி ஓமம் நடைபெற்ற பின் விமான கலசங்களுக்கு பூஜிக்கப்பட்ட புனித நீரை தலையில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்த சிவாச்சாரியார்கள் கோவில் அய்யனார் குதிரை மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசங்களுக்கு தெளிக்கப்பட்ட புனித நீரை சுற்றி இருந்த பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.