உசிலம்பட்டி அருகே மதுரை மாநகரின் பிரபல ரவுடி பிள்ளையார் கணேசன் இரயிலில் அடிபட்டு உயிரிழப்பு. தற்கொலையா, கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பிள்ளையார் கணேசன், இவர் மீது 20க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும், 20 க்கும் மேற்பட்ட கொள்ளை வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பிரபல ரவுடி பிள்ளையார் கணேசன் மீதுள்ள வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான இவர் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராமத்தில் போடியிலிருந்து மதுரை நோக்கி சென்ற இரயிலில் அடிப்பட்டு தலை மற்றும் உடலில் படுகாயமடைந்த நிலையில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வாலாந்தூர் காவல் நிலைய போலீசார் மற்றும் மதுரை மாவட்ட இரயில்வே போலீசார் விரைந்து வந்து பிள்ளையார் கணேசன் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பிரபல ரவுடி இரயிலில் அடிபட்டு தற்கொலை செய்து கொண்டாரா, படுகொலை செய்யப்பட்டு இரயில் தண்டவாளத்தில் உடல் வீசப்பட்டதா என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.