மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை ஆறு தயாராகிக் கொண்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்சித்திரை திருவிழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்று தான் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான சித்திரை திருவிழாவில், மே 5 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு நீர்வளத் துறை சார்பாக கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி நடைபெறுகின்றது.
சமீபத்தில் ஏவி பாலத்தின் அருகே புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையை சுற்றி ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியும், சேறு சகதிகளான இடங்களில், மண் அள்ளும் இயந்திரம் மூலம் சமப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யும் பணியும் நடைபெறுகின்றன. இதுபோக ஏவி பாலத்தின் அடியில் ஒட்டடை அடிக்கப்பட்டு தண்ணீர் வரும் படிக்கட்டுகள் சீர்படுத்தப்படுகின்றன. அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் மழை பெய்தாலும் சகதிகள் ஏற்படாத வகையில் ஜல்லி கற்கள் கொண்டு மேம்படுத்தப்பட்டு, சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும், அழகர் கோவில் வைகை ஆற்றில் இருந்து வண்டியூர் வரை அதாவது மூன்று கிலோமீட்டர் வரை உள்ள கருவேலம் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றது. இந்த பணியானது ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதன் பிறகு வைகை அணையில் இருந்து மே 3 தேதி 700 கன அடிக்கு தண்ணீர் திறக்கப்படும் மே 4,5 தேதி களில் 500 கன அடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் நீர்வள துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.