• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு..!

Byவிஷா

Nov 28, 2023

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர்.1-ம் தேதி புயலாகவும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால், அதற்கு “மிச்சாங்” என பெயர் வைக்கப்படும் என்றும், இதனால் டிச.3-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்..,
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேற்கு, வடமேற்காக நகர்ந்து நாளை (29-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாகவும் வலுப்பெறக்கூடும்.
இந்த மிச்சோங் புயல், ஆந்திரா, ஒடிசா கரையோரங்களை பாதிக்கலாம் என்றும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் (நவ.28, 29) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.3-ம் தேதி வரை மழை நீடிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும், நாளையும் (நவ.28, 29) தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், நவ.30-ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகளிலும் அதிகபட்சம் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
டிச.1-ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.