நற்றிணைப் பாடல் 160:
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென் மன்னே கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்
ஐம் பால் வகுத்த கூந்தல் செம் பொறித்
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே
பாடியவர்: ஆசிரியர் பெயர் இடம்பெறவில்லை
திணை: குறிஞ்சி
பொருள்:
அறம், நட்பு, நாணம் ஆகியவற்றைச் செல்வமாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும், அறத்தின் பயன், நட்பின் பண்பு, நாணத்தின் பெருமை ஆகியவற்றை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் உன்னைக் காட்டிலும் நான் நன்றாக அறிவேன். எப்போது? இவள் கண்களைக் காண்பதற்கு முன்பு. இப்போது அவை என்னிடமிருந்து பறிபோய்விட்டன – இப்படித் தலைவன் தன் பாங்கனிடம் (அணுக்கத் தோழன்) கூறுகிறான். சிவப்புக் குங்குமப் பொட்டு வைத்த நெற்றி பின்னலில் குவளை மலர். சுனையில் பூத்துத் தேனொழுகும் குவளை மலர். அரித்து மதமதக்கும் கண்ணின் பார்வை. இவற்றைக் காண்பதற்கு முன்பு என்னிடம் இருந்த நல்ல பண்புகள் இப்போது இல்லை.