நற்றிணைப் பாடல் 76:
வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!-
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!
பாடியவர்: அம்மூவனார்
திணை: பாலை
பொருள்:
வரவேண்டிய பருவமழை பொய்த்துவிட்டது. வானம் வெளுத்து வெறிச்சோடிக் கிடக்கிறது. துளியும் ஈரம் இல்லாமல் காடு இலை இல்லாத உலவை மரங்களுடன் இருக்கிறது. இங்குள்ள ஆல மர நிழலில் இளைப்பாறுவோம். பின்னர் வருத்தமில்லாமல் செல்வோம். தூய அணிகலன் அணிந்திருக்கும் சின்ன பெண்ணே! உன் ஊரிலே நம்மைப்பற்றி அலர் தூற்றுவார்கள். உன் ஊரில், புலவுநாற்றம் அடிக்கும் கடற்கரைக் கானல் மணலில், புன்னை மலர்கள் உதிர்ந்து தேன்மணம் கமழும் வழியில், பூவின்மீது நடக்கும்போதே சிவந்துபோகும் உன் காலடிகள் நோவாமல் மெல்ல நடந்து வா என்கிறான் காதலன். அவளுடைய பெற்றோருக்குத் தெரியாமல் தன்னுடன் வரும் தன் காதலியை நோவாமல் அழைத்துச் செல்ல வேண்டி இவ்வாறு கூறுகிறான்.