ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாசிப்பருப்பு கூழ்
பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்களுக்கு பலமான இடுப்பெலும்பு எப்பொழுதும் தேவை. பெண்கள் குழந்தையாகப் பிறந்து தவழ்ந்து நடக்கையில், பூப்படைகையில், திருமணமாகி கருத்தரிக்கையில், குழந்தைக்கு தாயாகையில், முதுமையில் முதுகு வளையாதிருக்க என எல்லா காலகட்டங்களிலும், பெண்களின் உடலின் இடுப்பெலும்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிக அவசியம். அவர்களது இடுப்பெலும்பை பலமாக்கி, முதுகு வலியை தூரம் விரட்டும் ஒரு சிறந்த உணவுப் பொருளை பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம். அதுதான் பாசிப்பருப்பு கூழ்.
பாசிப்பருப்பு கூழ் செய்யத் தேவையானவை:
பாசிப்பருப்பு – 100 கிராம்,
பச்சரிசி – 25 கிராம்,
உளுந்து – 1 தேக்கரண்டி,
பனை வெல்லம் – 1ஃ4 கிலோ,
நெய் – 50 கிராம்
செய்முறை-
முதலில் வெறும் வாணலியில், பச்சரிசியை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் பாசிப்பருப்பையும் உளுந்தையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்; வறுத்த அனைத்து பொருட்களையும் மாவாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில், பாதியளவு நெய்யினைக் காய வைத்து, அரைத்த மாவுடன் கலந்து கொண்டு நன்றாக கிளறவும். பனை வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, இளம் பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும். இந்தப் பாகுடன் மாவைச் சேர்த்துக் கொள்ளவும்; மீந்த நெய்யை இக்கலவையுடன் சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாக கிளறி இறக்கவும். தேவையெனில் நீர் சேர்த்து கொள்ளவும்; அவ்வளவு தான் சுவையான, உடலை வலிமையாக்கும் எலும்புகளை பலப்படுத்தும் அற்புத கூழ் தயார்!