நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மலர் கண்காட்சி களைகட்டி வரும் நிலையில், வருகிற மே 24ஆம் தேதியன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசியாக கொண்டாடப்படும் கொடைக்கானலில், கோடை விடுமுறைக்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து குவிகின்றனர். கொடைக்கானலுக்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஆண்டின் அனைத்து நாட்களிலும் இதமான சீதோஷ்ணம் நிலவி வந்த போதிலும் கோடை சீசன் மற்றும் ஆப் சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் கோடை விழா மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 24ம் தேதி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மே 24ம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி ஜூன் 1ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியுடன், கோடை விழாவும் தொடங்கி நாய்கள் கண்காட்சி, படகு போட்டி, மீன்பிடித்தல் போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மே 24 கொடைக்கானல் மலர் கண்காட்சி தொடக்கம்
