• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

9 நவகிரஹங்கள் உள்ள காலதேவி அம்மன் சிலை..,

ByE.Sathyamurthy

May 21, 2025

12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள காலதேவி அம்மன் சிலை. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது.

அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா?

அதுவும் நம்மூரில்! அதுதான் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி எனும் கிராமத்தில் உள்ள காலதேவி கோவில். கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ”நேரமே உலகம்”

புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. – காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது.

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான். பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.

கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும். கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.

காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும்.

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லமுடியும். தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.

ஏன் என்றால் இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது. விழாக்காலத்தில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது.