ரஸ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நீலிகண்ணீர் வடிக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் ரஸ்யாவுக்கு எதிராக வீரவசனம் பேசுகிறார். ஆனால் உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்கும் முயற்சியில் தான் ஆர்வம் காட்டுகிறது அமெரிக்கா. உலகமு முழுவதும் பல நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா செய்துவரும் சதிகளை வெளிகொண்டுவந்தவர் ஜூலியன் அசாஞ்சே…அமெரிக்காவின் ஆக்ரோஷத்துக்கு ஆளானவர்.
ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் போரை உருவாக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்காவை பற்றி ஊரறியும்; உலகறியும். இதன் அழிக்க முடியாத சான்றுகளாய் இருந்த அமெரிக்க ரகசிய கோப்புகளை தமது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு விட்டார் அசாஞ்சே. தனது கோரமுகத்தை வலுவான சாட்சிகளோடு நிரூபித்த அசாஞ்சேயை விடாமல் கொலைவெறியோடு துரத்தியது அமெரிக்கா. இரண்டரை வருடத்திற்கு முன்பு ஈக்வடார் தூதரகத்தில் இருந்து அசாஞ்சேயை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றது பிரிட்டன் போலீஸ்.சிறையில் கொடும் சித்திரவதையை அனுபவித்தார் அசாஞ்சே. தேவையான சிகிச்சையை கொடுக்க வற்புறுத்தினர் உலகம் முழுவதும் உள்ள முற்போக்காளர்கள். முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் சிறையிலேயே அசாஞ்சேக்கு கல்லறை கட்டும் நிலை உருவாகுமென்று 60 மருத்துவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.இப்பொழுது அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சாகும் வரை தண்டனை கொடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.இது தான் அமெரிக்காவின் ஜனநாயகம்.