ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1951-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி ஜப்பான் ஏர்லைன்ஸ் துவங்கப்பட்டது. இதன் பின்னால் 1987-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. மீண்டும் இந்த விமான நிறுவனம் முற்றிலுமாக தனியார்மயமாக்கப்பட்டது. டோக்கியோவின் நரிட்டா, ஹனேடா, ஒசாகா, கன்சாஸி ஆகியவை ஜப்பான் ஏர்லைன்ஸில் முக்கிய மையங்களாக திகழ்கின்றன. இந்த நிலையில் சைபர் தாக்குதலுக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தனது சமூகவலைதளத்தில், “உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 7.25 மணிக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரானதும் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவலைப் பகிர்கிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.” என்று தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் காலை 8.54 மணியளவில் வெளியிட்ட மற்றொரு பதிவில், “பிரச்சினை என்னவென்று அடையாளம் காணப்பட்டது. ஒரு ரவுட்டரை ஷட் டவுன் செய்துள்ளோம். இதனால் இன்றைக்கான உள்நாட்டு, சர்வதேச விமான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸில் ஏற்பட்டுள்ள இந்த சைபர் தாக்குதல் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.