சட்டசபையில் ஆளுநரை அமரவைத்துக்கொண்டு முதலமைச்சர் அவ்வாறு பேசியது தவறு என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
ஆளுநர் உரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆளுநர் உரை என்பது ஆண்டு தொடக்கத்தில் அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள், கொள்கைகள் பற்றியதாகும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதிய பெரிய திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை. அரசும், முதலமைச்சரும் தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொண்டு கவர்னர் மூலமாக சபாஷ் போட்டுக் கொண்டுள்ளனர். கேள்வி:- கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள சில விஷயங்களை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்துள்ளாரே? அது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்:- அப்படி யார் சொன்னது? அதுபற்றி எங்களுக்கு தெரியாது. நாங்கள் ஆளுநர் உரையைத் தான் கேட்க வந்தோம். முதலமைச்சர் உரையை கேட்க வரவில்லை. அச்சிடப்பட்ட ஆளுநர் உரை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அது முதலமைச்சருக்கும் பொருந்தும். ஆளுநரைஅமர வைத்து கொண்டு முதலமைச்சர் அவ்வாறு பேசியது மரபுக்கு எதிரானது. அநாகரீகமானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் அவ்வாறு பேசியது தவறு- இபிஎஸ் குற்றச்சாட்டு



