விஜய் சேதுபதி புதிய திரைப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.
’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் நடிகை சமந்தாவும் உள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அனிருத் இசையில் வெளியான இரண்டுப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.படம் ஏப்ரலில் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிகராக தமிழில் அறிமுகமாகிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்ததையடுத்து மாநில கிரிக்கெட் அணியில் தற்போது விளையாடி வருகிறார்.
இந்த 7 ஆண்டுகளில் ரியாலிட்டி டான்ஸ் ஷோக்களிலிலும் இந்தி பிக்பாஸ் சீசன் 12 லும் பங்கேற்ற ஸ்ரீசாந்த் பிக்பாஸில் ரன்னராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
தற்போது, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.