உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வாடி வாசலில் நடைபெறுமா தமிழக அரசு உரிய விளக்கம் தர முன்வருமா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கன்பட்டி ஊராட்சி கீழக்கரை வடக்கு பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த இடத்தை அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டு பார்வையிட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெறாத நேரத்தில் பொதுமக்கள் விரும்பினால் மற்ற விளையாட்டுகள் முறையாக இந்த அரங்கத்தில் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் தற்போது இந்த பணிக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன் பழமையான, பாரம்பரிய வீரவிளையாட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி ஆகும். இளைஞர்கள் தங்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இயற்கையாக அமைந்திருக்கும் வாடிவாசலில் தங்கள் வீரத்தை பறைசாற்றுவார்கள். இந்த ஜல்லிக்கட்டு உரிமை பறிபோனபோதும் அம்மாவின் அரசு இதற்கு தனி சட்டம் இயற்றி மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி வெற்றி வரலாறு படைத்தது.
ஆண்டுதோறும் தைத்திருநாளில் அவனியாபுரம்,பாலமேடு, அதனைத் தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இயற்கை அமைந்திருக்கும் வாடிவாசலில் நடைபெறும். தற்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரங்கம் அமைக்க பணிகள் நடைபெற்று வரும் வேலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் ஆண்டுதோறும் வாடி வாசலில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெறுமா..? இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அரங்கிற்குள் அடைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .