• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி ஜூன் 2வது வாரத்திற்குள் நிறைவடையும்

Byவிஷா

May 31, 2024

தமிழகத்தில் மொத்தம் உள்ள 37,553 அரசுப் பள்ளிகளில், 20,332 பள்ளிகளில் இணையதளவசதிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 17,221 அரசுப் பள்ளிகளில் ஜூன் 2வது வாரத்திற்குள் இணையதள வசதிகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் 519.73 கோடி ரூபாய் மதிப்பிலும், 22,931 திறன்மிகு வகுப்பறைகள் 455.32 கோடி ரூபாய் மதிப்பிலும் அமைக்கப்பட்டன. இவை 46,12,742 மாணவ மாணவிகள் பயனடையும் வகையில் இருக்கின்றன.
6,023 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 5 மற்றும் 6 ஆடிpள இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலை எளிமையாக்கும் பொருட்டு பாடப் பொருள்கள் அனைத்தும் காணொளி வாயிலாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள், மொழி ஆய்வகச் செயல்பாடுகள், மனவெழுச்சி நலன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் மாணவர்களுக்கான மதிப்பீடுகள் போன்றவை உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளைப் பள்ளிகளில் மேற்கொள்வதற்கு ஏற்கனவே இருந்த 5 மற்றும் 6 Mbps இணைய வேகத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்மூலம் 46 லட்சம் மாணவர்கள் கடினமான பாடப் பொருட்களை எளிமையாக காணொளி வாயிலாக கற்பதற்கும் மாணவர்கள் கற்ற பாடங்களை ஆன்லைன் மதிப்பீடுகள் மூலமாக பயிற்சிகள் மேற்கொண்டு பாடக் கருத்துக்களை தெளிவாக கற்பதற்கும், உயர்கல்வி வழிகாட்டுதல்களை எளிமையாகப் பெறுவதற்கும், ஆங்கிலத்தில் மொழிப் புலமை பெற மொழி ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கும், கணிப்பொறி சார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் வழிவகை ஏற்படும்.
தமிழ்நாடு அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப்பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, எஞ்சிய 17,221 அரசுப் பள்ளிகளுக்கு ஜுன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமாக கல்வி கற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.