• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சாய்ராம் கல்வி நிறுவனங்களில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு ஹாக்கத்தான் போட்டி..,

ByPrabhu Sekar

Feb 21, 2026

சென்னை சாய்ராம் கல்வி நிறுவனங்களில், சர்வதேச அளவிலான பில்ட் டு கெதர் செயற்கை நுண்ணறிவு நிலைத்த வளர்ச்சி ஹாக்கத்தான் போட்டி ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்தின் இ.டி.எச். சூரிச் மற்றும் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணைப்பில், 24 மணி நேர தொடர்ச்சியான ஹாக்கத்தான் பிப்ரவரி 18 முதல் 20 வரை நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ள நிலைத்த வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்டு, சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் நடைமுறை தீர்வுகளை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமாகும்.

மாணவர்களின் புதுமை முயற்சிகளை பாராட்டி ஊக்கமளித்தனர். மேலும், பில்ட் டு கெதர் கல்வி இயக்கத்தின் தலைவர் மற்றும் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சான் யங் பார்க், பில்ட் டு கெதர் இயக்குநரும் ஹார்வர்டு வணிகப் பள்ளியுடன் தொடர்புடையவருமான சிரில் கிரம்பெக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறந்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

இந்த ஹாக்கத்தானில், 2,000 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் 24 மணி நேரம் இடைவிடாமல் செயல்பட்டு, சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் புதுமையான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை வடிவமைத்தனர்.

மாணவர்கள் அணிகளாக இணைந்து, சமூகப் பிரச்சினைகளை ஆய்வு செய்து, அவற்றிற்கான செயலிகள் மற்றும் மாதிரிகளை உருவாக்கினர். சிந்தனை வடிவமைப்பு மற்றும் பிரச்சினை தீர்வு முறைகளின் மூலம், தொழில்நுட்ப அறிவை சமூக நலத்துடன் இணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற நிலையில், சிறந்த திட்டங்களை வழங்கிய அணிகள் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் முதல் 120 அணிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும், வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையுடன் 154 பரிசுகள் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டது

இந்த சர்வதேச ஹாக்கத்தான் மூலம், மாணவர்கள் புதுமை சிந்தனை, தொழில்நுட்ப திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஒருங்கிணைக்கும் அரிய வாய்ப்பை பெற்றதாக கல்வி நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.