பெரம்பலூர் கிளைச்சிறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் கிளை சிறை பார்வையாளர் குழுவினர் ஆய்வு.
பெரம்பலூர் கிளை சிறையில், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் கிளைச்சிறை பார்வையாளர் குழுவினர் (board of visitors for perambalur sub jail) இன்று (07.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை இயக்குநர் ஜெனரல் அவர்கள் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் கிளை சிறையில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய கிளைச்சிறை பார்வையாளர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவில் மாவட்ட சுகாதார அலுவலர், இணை இயக்குநர் மருத்துவப் பணிகள், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், வேளாண்மைத்துறை இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர், நகராட்சி சுகாதார அலுவலர், மாவட்ட மனநல மருத்துவர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதனடிப்படையில், இக்குழுவினர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா மற்றும் குழு உறுப்பினர்கள் பெரம்பலூர் கிளைச் சிறையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பெரம்பலூர் கிளைச்சிறையில் உள்ள கைதிகளிடம் உரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் தரமாக உள்ளதாக என கேட்டறிந்தனர். மேலும், மனநல ஆலோசனை வழங்க மருத்துவர்கள் முறையாக வருகை தருகின்றார்களா எனவும் கேட்டறிந்தனர்.
பின்னர், கிளைச்சிறையில் உள்ள விசாரணை சிறைவாசிகள், தண்டனை சிறைவாசிகள் மற்றும் காவலர்கள், சமையலர், பணியாளர்கள் உள்ளிட்டோர் விபரங்களை பராமரிக்கும் பதிவேடுகளையும், ஆவண பாதுகாப்பு அறைகளையும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் சிறைக் கைதிகளுக்கு உணவு சமைக்கும் கூடத்தை பார்வையிட்டு, சமைக்கப்பட்டிருந்த உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தார்கள்.
உணவு வகைகள் அரசு அட்டவணைப்படி வழங்கப்படுகிறதா, தரமாக உள்ளதா என்பது குறித்தும் சிறையில் உள்ளவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். பின்னர், குழுவினருடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், குழுவினரின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும், சிறைக்கைதிகளுக்கு சட்ட உதவி மையம் மூலமாக சட்ட ஆலோசனைகளையும் வழங்கப்படும் விபரம் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) இரா.ஜெயஸ்ரீ, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் பாபு, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பகவத்சிங், மனநல மருத்துவ அலுவலர்கள் மரு.வினோத், மரு.அசோக், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை அலுவலர் தே.வீரபாகு, கிளைச் சிறைக்கண்காணிப்பாளர் சி.செந்தில்குமார், சிறை முதல் நிலை காவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
