கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களும், 03 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றன.

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை புகார்தாரர்களுக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களிலிருந்து காவல் துறையினரால் நேரடியாக அவர்களுடைய இல்லங்களுக்கே தேடிச்சென்று வழங்க வேண்டும் என கடந்த 21ஆம் தேதி பதவியேற்ற கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த நடைமுறையானது கடந்த 21 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு இதுவரை 76 முதல் தகவல் அறிக்கை FIR வழங்கப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை (FIR) புகார்தாரர்களின் சிரமத்தை தவிர்க்க அவர்களின் இல்லம் தேடி சென்று வழங்கப்படுவது பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை மற்றும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
கரூர் மாவட்ட காவல்துறையின் இத்தகைய மக்கள் நேய நடவடிக்கைகள் ஒரு முன்மாதிரியாக இருப்பதோடு பொதுமக்களின் நம்பிக்கையை வெகுவாக பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.