உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.
உலக குத்துச்சண்டை போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 57 கிலோபிரிவு போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மினும், போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவும் மோதினர். இதில் ஜாஸ்மின் லம்போரியா 4-1 (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) என்ற கணக்கில் போலந்து வீராங்கனை ஜூலியாவை வீழ்த்தினார்.
இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் ஜாஸ்மின் தங்கம் வென்ற 9வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்திய வீராங்கனைகள் மேரி கோம் (6 முறை தங்கம்), நிகத் ஜரீன் (2 முறை), சரிதா தேவி, ஜென்னி, லேகா, நிது கங்காஸ், லாவ்லினா போர்கோஹெய்ன், சவிதா புரா (தலா ஒரு முறை) ஆகியோர் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று உள்ளனர். தனது 3வது உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே 24 வயதான ஜாஸ்மின் தங்கம் வென்று சாதித்துள்ளார்.
மகளிர் 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மினாக் ஷியும், கஜகஸ்தான் வீராங்கனை நஸிம் கியாஜாய்பேவும் மோதியதில் மினாக் ஷி 4-1 என்ற கணக்கில் நஸிமை வீழ்த்தி தங்கம் வென்றார். நூபுர் ஷியோரன் 80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் போலந்து வீராங்கனை அகதா காஸ்மார்ஸ்காவுடன் மோதியதில் நூபுர் வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிர் 80 கிலோ பிரிவு போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை பூஜா வெண்கலம் வென்றுள்ளார். இதனையடுத்து போட்டியின் முடிவில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
உலக குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்
