• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

டிச.17ல் காசி தமிழ் சங்கம் தொடக்கவிழா..!

Byவிஷா

Dec 15, 2023

வருகிற டிசம்பர் 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று காசி தமிழ்ச்சங்கத்தின் 2வது நிகழ்வு தொடக்கவிழா நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கலாச்சார மையங்களாகத் திகழ்ந்த வாராணசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு கடந்த ஆண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்டோர் வாராணசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு எட்டு நாள் சுற்றுப்பயணம் செய்து வாராணசி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மிகச்சிறந்த அனுபவங்களை பெற்றனர்.
இந்நிலையில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் காசி தமிழ் சங்கமத்தின் 2-வது கட்ட நிகழ்வை மார்கழி மாத முதல் நாளான வரும் டிசம்பர் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைத் தொடங்கி டிசம்பர் 30ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 1,400 பேர் வாராணசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு ரயிலில் சென்று வர 8 நாள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள், மதம் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய தலா 200 பேர் கொண்ட ஏழு குழுக்களாகப் பிரித்து அனுப்பப்படுவார்கள். இந்திய அரசின் மத்தியக் கல்வி அமைச்சகம் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.