விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. விருதுநகரில் நேற்று காலை கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டு வந்து சாரல் மழை பெய்யத் துவங்கியது. நேரம் செல்லச்செல்ல பலத்த மழை பெய்தது. இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. திடீர் பலத்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
பழைய பேருந்து நிலையத்தின் உள்ளேயும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் காய்கறி மார்க்கெட் பகுதியிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், காய்கறிக்கடை வியாபாரிகள் மிகுந்த சிரமப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் விருதுநகரில் நிலவி வந்த வெட்கை தணிந்தது. மேலும் நேற்று இரவு சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நீண்ட நேரம் தொடர் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தற்போது பெய்து வரும் கோடை மழை, மானாவாரி விவசாயத்திற்கு மிகுந்த பலனைத் தருவதாக உள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்