சிவகாசியின் முக்கிய சாலையில், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 2 கோவில்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில், போக்குவரத்திற்கு இடையூராக இருக்கும் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகாசி – பழைய விருதுநகர் சாலையில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில், கயறு குத்து பாலம் அருகே, சாலையின் அருகில் பல ஆண்டுகளாக விநாயகர் கோவில் மற்றும் இருளப்பசுவாமி கோவில் இருந்து வந்தது. இதனால் பி.கே.எஸ்.ஏ.ஆறுமுகம் சாலை, அம்மன் கோவில்பட்டி தெரு, புறவழிச் சாலையில் இருந்து சிவகாசி நகர் பகுதிகளுக்குள் சென்று வரும் பொது மக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. இதனையடுத்து இந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கோவில்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இன்று காலை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த விநாயகர் கோவில் மற்றும் இருளப்பசுவாமி கோவில், அதனை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து அகற்றினர். பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கோவில்கள் இடித்து அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.