மதுரை விளாங்குடி நேருஜி பிரதான சாலை என்பது குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்றின் டயர் குழியில் சிக்கி ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் இதுபோன்ற சம்பவம் விளாங்குடியில் தொடர்கதையாகவே உள்ளதாகவும், சேரும் சகதியுமான சாலையில் நடந்துக்கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மழைக்காலங்களில் இப்படியான சாலைகளால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.