மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலதாமதம் செய்யாமல் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கக்கோரி, ஊழியர்கள் துணைவேந்தர் அலுவலகம் முன்பு ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9 மாதங்களாக சம்பளம் வழங்குவதில் தாமதம் காட்டி வருவதாகவும். இதனால் பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்கள் அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இனி வரும் காலங்களில் மாதந்தோறும் கடைசி நாள் அல்லது அடுத்த மாதத்தின் முதல் தேதிகளில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர், இதுவரை வழங்காத கடந்த மாத சம்பளத்தை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி துணைவேந்தர் அலுவலகத்தில் துணைவேந்தர் குமாரை சிறைபிடித்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஒருங்கிணைந்த ஜாக்டோ குழு தலைவர் முத்தையா பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் பார்த்தசாரதி மற்றும் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் துணைவேந்தர் அலுவலகத்தில் காலை முதல் மாலை 4 மணி வரை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.