• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோவையில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ குரல் பதிவு அழைப்பால் மக்கள் அவதி

Byவிஷா

Mar 25, 2024

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவையில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என வரும் அலைபேசி அழைப்புகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது..,
“திருப்பூர் மாநகரில் வசித்தாலும், எங்கள் பகுதி கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்டது. தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அலைபேசியில் வரும் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளால் பொது மக்கள் அவதியடைகிறோம். தேர்தலுக்கு மூன்றரை வாரங்களே இருக்கும் நிலையில், கோவை மக்களவை தொகுதியில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என்றும், வேட்பாளர் மற்றும் கட்சியின் பெயரை கூறி யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள் என்பது தொடர்பாகவும் கேள்வி கேட்கிறார்கள்.
அழைப்பை ஏற்றவுடன் யார் எங்கிருந்து அழைக்கிறார்கள் என்ற அடிப்படை விவரம்கூட இல்லை. எடுத்தவுடன் மக்களவை தேர்தலில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என்ற கேள்வியுடன்தான் ஆரம்பிக்கிறது. தேர்வு செய்தால், ஒவ்வொரு கட்சி மற்றும் வேட்பாளர் பெயரை கூறி, ஒவ்வொரு எண்ணை அழுத்த சொல்கிறார்கள். யாருக்கும் வாக்களிக்க முடிவு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும் அதற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழுத்த சொல்கிறார்கள்.
இந்த அழைப்புகள் யார் மூலமாக வருகிறது என்றுகூட பாமர மக்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இது சர்வே என்றால், இதனை யார் எடுக்கிறார்கள் என்ற அடிப்படை தகவல் இல்லாமல் அழைப்புகள் வருகின்றன. எந்த எண்ணையும் அழுத்தாமல் அழைப்பை துண்டித்தால், அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் அதே கேள்வியுடன் அழைப்பு வருகிறது. எத்தனை முறை துண்டித்தாலும் அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது.

வாக்குரிமை எந்தளவு பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றோ, அதே அளவுக்கு யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த குரல் பதிவு அழைப்பில், ஏதாவது ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்தால்தான், அடுத்து அழைப்பு வராமல் உள்ளது. இல்லையென்றால், தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. இதனால் பல்வேறு தரப்பு பொதுமக்கள் அவதி அடைகிறோம். இவற்றை எல்லாம் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்” என்றனர்.

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, அலைபேசிகளில் வரும் இது போன்ற அழைப்புகளைக் கட்டுப்படுத்துமா தேர்தல் ஆணையம்? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.