நற்றிணைப் பாடல் 53:
யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது
அறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?
”வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள்
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,
முனியாது ஆடப் பெறின், இவள்
பனியும் தீர்குவள், செல்க!” என்றோளே!
பாடியவர்: நல்வேட்டனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
வானளாவ உயர்ந்த மலைப்பிளவுகள். இடிமின்னலுடன் இரவில் பெருமழை பொழிவதால், காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காய்ந்த சருகுகளையும் புதிய இலைகளையும் அடித்துக்கொண்டு புதுவெள்ளம் பாய்கிறது. அதனை கண் குளிரப் பார்க்கவேண்டும். அந்த நீரைப் பருகவேண்டும். அந்த வெள்ளத்தில் மகிழ்வோடு நீராடவேண்டும். இவள் இப்படிச் செய்தால் இவள் ஏக்கம் தீரும். இவள் துன்பத்துக்கு மருந்தாகவும் அமையும். இவ்வாறு எண்ணி, ‘செல்க’ என்று சொல்லித் தாய் அனுப்பிவைக்கிறாளே, அவரைப் பற்றிய செய்தியை அவனோடு நான் நீராடியதை நான் மறைத்ததை அறிந்துகொண்டாளோ? அவள் கருதியது வேறு என்னவாக இருக்கும்? என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். அவளுக்காக அங்கொரு பக்கம் காத்திருக்கும் அவன் இதனைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.