நற்றிணைப்பாடல்: 390
வாளை வாளின் பிறழ, நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ; யாணர் ஊரன் காணுநன்ஆயின், வரையாமைஓ அரிதே; வரையின், வரைபோல் யானை, வாய்மொழி முடியன் வரை வேய் புரையும் நல் தோள் அளிய - தோழி! - தொலையுந பலவே.
பாடியவர்:அவ்வையார்
திணை: மருதம்
பொருள்:
தோழீ! வாளைமீன்கள் வாள்போலப் பிறழாநிற்ப அவற்றை இரையாக உண்ணக் கருதாது நாள்தோறும் பொய்கையிலுள்ள நீர்நாய் தங்கிய துயிலை ஏற்றுப் பொருந்தாநிற்கும்; கை வண்மையுடைய கிள்ளிவளவனது கோயில் வெண்ணியைச் சூழ்ந்த வயலிலுள்ள வெளிய ஆம்பலின் அழகிய நெறிப்பையுடைய தழையை; மெல்லிதா யகன்ற அல்குலின் மேலே அழகுபெற உடுத்து யானும் இங்கு நடக்கின்ற விழாக் களத்தின்கண்ணே செல்ல வேண்டும் முன்னமே கருதாமையின் அது வீணே கழிந்தது; இப்பொழுது இவ்விளமகள் தோற்றப் பொலிவோடு செல்லுதலைப் புதுவருவாயினையுடைய ஊரன் காண்பானாயின் ஏனையோரை ஏறட்டுப் பாராது இவளையே கொண்டுசெல்லாநிற்கும், அங்ஙனம் கொள்ளாது விடுதலரிதேயாம்; கொண்டு சென்றொழிந்தாலோ வரைபோல்கின்ற யானையும் வாய்மையுமுடைய முடியனது மலையிலுள்ள மூங்கில்போன்ற இவனுக்குரிய இல்லுறை மாதாகளின் நல்ல தோள்கள்; பல தம் நலனிழப்பனவாகும்! கருதின் அவை இரங்கத்தக்கன.