• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byதரணி

Aug 29, 2023

நற்றிணைப் பாடல் 240:

ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வெளவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே.

பாடியவர் : நப்பாலத்தனார்
திணை: பாலை

பொருள்:

கூர்மையாயெழுந்த வெளிய பற்களையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளைமையுற்ற தோழீ! நம் காதலர் தாம் கையாலணைத்து முயங்கும் புணர்ச்சியானது மெய்யிலே பொருந்த வேண்டாவென்று மாறுபடுதலானே ஏங்குகின்ற உயிர்த்தலோடு பொருந்திய பருத்த கொங்கையையுடைய என் மெய்யானது; இனித் தனியே கிடந்து துயிலுவதனாலே துன்பப்படுந் தன்மையதாயிராநின்றது எனினும்; வெயிலால் வெப்பமுற்ற பரல்மிக்க பள்ளத்தின் ஒரு புறத்திலே குந்தாலியாற் குழித்த கிணற்றையடைந்து; பசுவின் நிரையைப் பாதுகாக்கும் ஆயர் பறித்த சிறுகுழியிலுள்ள நீரை; யானை வரிசையாகச் சென்று உண்ணாநிற்கும்; அவர் சென்ற கானமானது திண்ணிய மலைபோல அழியாத தன்மையதாய் நின்று கருதுகின்ற எனக்கு அச்சத்தைத் தாராநின்றது; அத்தகைய அந்தக் கொடிய சுரமுற்ற பாலை நிலத்தினைப் படைத்த கொடியோன்றானும்; அதன்கட் பையச் சென்று நனி துன்புற்று வருந்துவானாக!