• Sat. Apr 27th, 2024

ஓநாய்க்கு விரித்த வலையில் ஆடு சிக்கினால்.. ‘எப்.ஐ.ஆர்’ !

விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில், மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்! இசை யமைத்துள்ளார் அஸ்வத்.. இரக்கம் இல்லாமல் ஒரு சில தீவிரவாதிகள் செய்யும் கொடூர செயலுக்கு இந்தியாவில் அப்பாவி மக்களும் பலிக்கு ஆளாகின்றனர் என்ற முக்கிய கருத்தை சொல்லும் படம்தான் எப்.ஐ.ஆர்!

மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் முஸ்லிமாக பல விஷயங்களை நுணுக்கமாக சிந்தித்து அந்த கதாபாத்திரத்திற்கு வலு கூட்டி உள்ளார்.

‘ராட்சசன்’ வெற்றிபெற்றதை அடுத்து விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்திருக்கும் படம் இது.. தாய்க்கு மகனும், மகனுக்கு தாயுமாக வாழ்ந்து வரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் விஷ்ணு விஷால். ஒரு கட்டத்தில் நண்பனின் வேலையை இவர் ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதுவே அவருக்கு பாதகமாக அமைகிறது.

விமான நிலையத்தில் அவருடைய செல்போன் காணாமல் போகிறது. அதன் மூலம் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு சிறைக்குள் அடைத்து சித்ரவதை செய்யப்படுகிறார்! அவருடைய அம்மாவின் வேலை பறிபோகிறது. விஷ்ணு விஷாலை நிரபராதி என்று நிரூபிக்க போராடுகிறார் காதலி மஞ்சிமா மோகன்.
ஒரு சந்தர்ப்பத்தில் போலீசின் சித்ரவதைகளை தாங்க முடியாமல், ”நான் பயங்கரவாதிதான்” என்று விஷ்ணு விஷால் பழிகளை எல்லாம் தன் தலையில் போட்டுக்கொள்கிறார். அவர் மீதான பொய்யான பழிகள் எல்லாம் அவரை பாதித்தனவா, இல்லையா? என்பது ‘கிளைமாக்ஸ்.’

விஷ்ணு விஷாலுக்கு இன்னொரு திருப்பமாக அமைந்த படம் இது. எந்த குற்றமும் செய்யாத இஸ்லாமிய இளைஞராக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டை காட்சிகளில் புதிய அத்தியாயம் படைத்து இருக்கிறார்.

மஞ்சிமா மோகன் வக்கீல் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன், கவுரவ் நாராயண் ஆகிய இருவரும் உயர் அதிகாரிகளாக வருகிறார்கள்.

இரவு நேர சென்னை நகரையும், அதிகாலை சென்னையையும் அழகும், ஆபத்தும் கலந்து படமாக்கி இருக்கும் விதத்துக்காக ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்டை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனு ஆனந்த் இயக்கியிருக்கிறார்.

படம் முழுக்க நிறைய நடிகர்கள். அதுவும் புதுமுகங்களாக இருப்பதால் குழப்பம். யார் யார் என்ன கதாபாத்திரம் என்பதை புரிந்துகொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இடைவேளைக்குப்பின் காட்சிகள் மின்னல் வேகத்தில் பயணிக்கின்றன.

ராட்சசன் படத்துக்குப்பின், வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணு விஷாலுக்கு இந்தப் படம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்றே கூறலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *