செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஹெலிபேடு தளம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் ஜூலை 28-ந் தேதி தொடங்கும் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி தொடர்ந்து ஆகஸ்ட்டு 10 -ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் வெவ்வேறு வெளிநாட்டு தலைவர்கள் பலர் மாமல்லபுரம் வர உள்ளனர். இவர்களது பாதுகாப்பு கருதி அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் அதிக தூரம் தரைவழி பயணத்தை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விமான நிலையம் மற்றும் தாம்பரம் விமானப்படை தளங்களில் இருந்து, நேரடியாக மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் வான்வழி தடங்கள் எப்படி, அதன் இறங்கு தள வசதிகள் எங்கெல்லாம் உள்ளது என்று செங்கல்பட்டு சப்-கலெக்டர் சஜ்ஜீவனா, டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் உள்ளிட்டோர் திருவிடந்தை, கோவளம், பூஞ்சேரி பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
கோவளத்தில் உள்ள தனியார் வான்வழி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தளம், திருவிடந்தையில் 2018-ம் ஆண்டு நடந்த ராணுவ கண்காட்சியின் போது பிரதமர் மோடி வந்து இறங்கிய தளம், பூஞ்சேரி அடுக்கு மாடி குடியிருப்பு தளம் போன்ற பகுதிகளில் ஹெலிகாப்டர் வந்திரங்க ‘ஹெலிபேடு’ அமைக்கப்படலாம் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.