சிவகாசி பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, நகர் பகுதியில் உள்ள பிரதான குளங்கள் மற்றும் ஊருணி நிரம்பியது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்றிரவு 7 மணிக்கு மேல் லேசான சாரல்மழை பெய்யத் துவங்கியது. தொடர்ந்து சாரல்மழையாக பெய்து வந்த நிலையில், இரவு 10 மணிக்கு மேல் கனமழை பெய்யத் துவங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரம் இடை விடாமல் கனமழை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் மழை பெய்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. சிவகாசியின் தாழ்வான பகுதிகள், நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வெள்ளக்காடாக ஓடியது. இரவில் பெய்த திடீர் கனமழையால் சிவகாசி நகரின் மையப் பகுதியில் உள்ள சிறுகுளம் கண்மாய் முற்றிலுமாக நிரம்பியது. மேலும் சிவகாசி – திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள பெரியகுளம் கண்மாய் நிரம்பும் நிலையில் உள்ளது. மேலும் பேருந்து நிலையம் அருகேயுள்ள பொத்தமரத்து ஊருணியும் நிரம்பியது. பல ஆண்டுகளுக்கு பின்பு சிவகாசி நகர் பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஊருணி நிரம்பியதால் சிவகாசி பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.