• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரையில் கைத்தறித் துறை அமைச்சர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

May 6, 2025

மதுரையில் செயல்பட்டு வரும் மதுரா கோட்ஸ் நிறுவன ஆலையின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசு கைத்தறி தொழில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கைத்தறி நெசவாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் நோக்கில் கூட்டுறவு அமைப்பின் கீழ் நெசவாளர்கள் மற்றும் துணிநூல் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அரசுத் திட்டங்களின் மூலம் அவர்தம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடும் வகையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயல்பட்டு வருகிறது.

விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மற்றும் மானியத்துடன் மின்சாரம் வழங்கும் திட்டம், கைத்தறி ஆதரவுத் திட்டம், நெசவாளர்களுக்கான முதியோர் ஓய்வூதியத் திட்டம், காப்பீட்டுத் திட்டம், கைத்தறித் துணிகளை சந்தைப்படுத்துவதற்கான நிதியுதவித் திட்டம், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
ஆர். காந்தி அவர்கள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து 2 நாள் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். முதலாம் நாள் (05.05.2025) தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று (06.05.2025) காலை இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள அச்சங்குளம் கூட்டுறவு நுாற்பாலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்பு, மாலையில் மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலை நிறுவனமான மதுரா கோட்ஸ் நிறுவன ஆலையில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நுாற்பாலையின் செயல்பாடுகள், தொழில்நுட்பங்கள், மகளிருக்கான தொழில் வாய்ப்புகள் என பல்வேறு தரவுகள் குறித்து மதுரா கோட்ஸ் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது, துணிநூல் துறை இயக்குநர் இரா.லலிதா, கூடுதல் இயக்குநர் மகாலிங்கம், மண்டல துணை இயக்குநர் (மதுரை) க.திருவாசகர் , மதுரா கோட்ஸ் நிறுவனத்தின் முக்கியப் பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.