பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “திமுகவிற்கு வாக்கு அளித்தவர்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.
சமீபத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாத திமுக அரசு மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் விமர்சனம் செய்யும் எதிர்க் கட்சியினரை கைது செய்து வருகிறது. இதன் காரணமாகத்தான் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.திமுக ஆட்சியில் 150க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது. அத்தனையும் பட்டா நிலத்தில் இருந்தவை. திமுகவின் இந்து விரோத ஆட்சியால் மக்கள் கோவில்களுக்குச் செல்ல முடியவில்லை. பக்தர்களை திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் பங்கேற்க விடாமல் தடியடி நடத்தி உள்ளனர்.திமுக அரசு கோவில்களை கொள்ளையடிக்க திட்டமிட்டு அதற்கான வேலையை துவங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் கோவில் நகைகளை உருக்கி பிஸ்கெட் ஆக மாற்றும் நடவடிக்கை. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்.
பிரதமர் மோடி, பிபின் ராவத் மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை தலைமைச் செயலர் கேட்டிருப்பது வரவேற்கக்கூடியது” என்று அவர் கூறினார்.