மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ளது சத்திரம் அரசு நடுநிலைப்பள்ளி இந்த பள்ளியில் சோழவந்தான் பகுதியிலிருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதால் மாலை நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதாகவும், பணி நேரங்களில் வெளி நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து தகராறில் ஈடுபடுவதாகவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் இளைஞர்கள் மது அருந்துவதும் கஞ்சா மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்தி காலி பாட்டில்களை வீசி செல்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இதுகுறித்து பல முறை பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஆகையால் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதாகவும், அதே வேளையில் குறைந்த அளவிலான மாணவ, மாணவிகள் இருக்கும் நிலையில் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் பள்ளியில் போதுமான அளவு மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கான சுற்றுசவர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகளிடம் உரிய முறையில் எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.