22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.52,000-ஐ தொட்டதால் இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தங்கம் வைத்திருப்போர் தேர்தலுக்காக அதனை விற்று பணமாக்குவதால் அதன் தேவை குறைந்து விலையும் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கணிப்புகளை எல்லாம் தவிடுபொடி ஆக்கி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனிடையே இன்று வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.52,000-ஐ தொட்டது.
அதன்படி, கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.52,000க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.84க்கும், கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.84,000க்கம் விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்கம் மீதான இறக்குமதி வரி 15 சதவீதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை குறைக்க வேண்டும் என்றும் நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.