தங்கத்தை நகையாகவோ, நாணயங்களாகவோ முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க சிலர் விரும்புவார்கள். இது போன்றவர்களை இலக்காக வைத்து 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான் தங்கப் பத்திரத் திட்டம். இத்திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில் வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி, விலையேற்ற பலனை பெற முடியும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்கிறது.
அதன்படி, மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து தங்கப் பத்திரங்களை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த தங்கப் பத்திரங்கள் 2021 அக்டோபர் முதல் 2022 மார்ச் மாதம் வரை 4 பகுதிகளாக வெளியிடப்படவுள்ளன. 2021ம் ஆண்டில் நவம்பர் 2, டிசம்பர் 7 ஆகிய தேதிகளிலும், 2022ம் ஆண்டில் ஜனவரி 18, மார்ச் 8 ஆகிய தேதிகளிலும் வெளியிடப்படும்.
இந்த தங்கப் பத்திரங்கள் வர்த்தக வங்கிகள், குறிப்பிட்ட தபால் அலுவலங்கள் மற்றும் பங்குச் சந்தை மூலம் விற்கப்படும். மேலும், இந்த திட்டத்தில் தங்கம் வாங்கும் போது கணிசமான அளவில் லாபமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இணையதளம் மூலம் விண்ணப்பித்து தொகையை செலுத்துபவர்கள் இதில் 50 ரூபாய் தள்ளுபடியும் பெற முடியும். இந்த பத்திரங்களை 8 ஆண்டுகளுக்கு பிறகு அரசிடம் திரும்பத் தந்து அப்போதைய தங்கத்தின் விலையை பெற்றுக்கொள்ளலாம்.