• Mon. Jan 20th, 2025

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ஜி.கே.வாசன்

Byவிஷா

Dec 31, 2024

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடிதம் ஒன்றை எழுதி துண்டுப்பிரசுரமாக எழுதி வெளியிட்டதற்காக அக்கட்சியினரைக் கைது செய்ததைக் கண்டித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதவில் கூறியிருப்பதாவது..,
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டபோது தமிழக அரசு கைது நடவடிக்கை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது. அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். த.வெ.க வின் தலைவர் விஜய் கடித நகலை பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொடுத்தது மக்கள் நலன் சார்ந்தது. அந்த வகையில் த.வெ.க வின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடித நகலை பொது மக்களிடம் கொடுத்தனர். இதற்காக த.வெ.க வின் பொதுச்செயலாளர் அவர்களையும், நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழக காவல்துறையினர் கைது செய்திருப்பது ஏற்புடையதல்ல.
இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. பெண் இனத்தின் பாதுகாப்பின் அவசியமும், சட்டம் ஒழுங்கும் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது, விழிப்புணர்வுக்கு உகந்தது. குறிப்பாக தேவையில்லாமல், அரசியல் காரணத்திற்காக எதிர்க்கட்சியினர் மீது கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு த.வெ.க வின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஜி.கே வாசன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.