• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஜி20 உச்சி மாநாடு: உலகத்தலைவர்களுக்கு
பிரதமர் மோடி வழங்கிய நினைவுப்பரிசுகள்

இந்தோனேசியாவில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத்தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் நாட்டின் கலாசார செழுமையை, பாராம்பரியத்தை பறைசாற்றும் கலை படைப்புகளை, பொருட்களை பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளாக வழங்கினார்.
இதுபற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சிருங்கர் ராசாவை சித்தரிக்கும் காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களை பிரதமர் மோடி வழங்கினார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு வழங்கிய நினைவுப்பரிசு, குஜராத்தில் பெண் தெய்வ கோவில்களுக்கு காணிக்கையாக வழங்குகிற கைத்தறி ஆடை ஆகும். ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசுக்கு அவர் தந்தது, குஜராத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைப்பொருளான பித்தோரா. இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசு, ‘படன் படோலா’ துப்பட்டா ஆகும். பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோருக்கு நினைவுப்பரிசாக தந்தது, குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைப் பொருளான அகேட் கிண்ணங்கள் ஆகும். ஜி-20 உச்சி மாநாட்டை நடத்திய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு குஜராத்தின் சூரத் நகரின் திறமையான தொழிலாளிகளால் செய்யப்பட்ட தனித்துவமான நேர்த்தியான வேலைப்பாடு கொண்ட வெள்ளிக் கிண்ணம், இமயமலைப்பகுதியில் சிறப்பு வாய்ந்த கின்னவுர் சால்வை ஆகியவற்றை பிரதமர் மோடி வழங்கினார்.