• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நரபலி பூஜை செய்வதாகக் கூறி இளம்பெண்ணிடம் மோசடி

Byவிஷா

Jun 27, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரிடம் நரபலி பூஜை செய்வதாகக் கூறி ஒரு கும்பல் அவரிடம் இருந்து நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காடஞ்சேரி பகுதியை சேர்ந்த சகாய ஜெகன் மனைவி கிளாடிஸ் அனுஜா (33). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், “எனக்கு திருமணமாகி கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நான் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறேன். எனது ஊரில் இருந்து தினமும் அரசு பஸ்சில் நாகர்கோவிலுக்கு வருவேன். அப்போது பஸ்சில் என்னுடன் பயணம் செய்த கருங்கல் பாலூரை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் எனக்கு உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது. இதனால் சரியாக வேலைக்கு செல்லவில்லை. பின்னர் என்னை பஸ்சில் சந்தித்த அந்த பெண், ‘உனக்கு யாரோ செய்வினை வைத்துள்ளனர். இதனை பரிகார பூஜை செய்து சரி செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். குடும்பத்தில் தொடர்ந்து இறப்பு நிகழும். அதங்கோடு பகுதியில் எனக்கு தெரிந்த மந்திரவாதி ஒருவர் உள்ளார். அவர் மூலம் உனது பிரச்சினைகளை சரி செய்து தருகிறேன்’ என கூறினார்.
முதலில் நான் இதை நம்பவில்லை. அப்போது அவர் எனது கணவரையும் செய்வினை பாதிக்கும் என்று பயமுறுத்தினார். இதையடுத்து நான் அவர் கூறியபடி பரிகாரபூஜை செய்ய சம்மதித்தேன். முதலில் ரூ.1 லட்சம் பணமும், ஒரு பவுன் நகையும் எனனிடம் இருந்து வாங்கினார். பின்னர் நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ.2.60 லட்சம் பெற்றனர்.
ஆனால் அவர்கள் கூறியபடி எந்த பரிகார பூஜையும் செய்யவில்லை. மாறாக அந்த பெண்ணும், மந்திரவாதியும் சேர்ந்து என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். அப்போதுதான் அவர்கள் மோசடி செய்வது தெரிய வந்தது. அவர்களின் தொல்லையை தாங்க முடியாமல் நான், ‘எந்த பூஜையும் செய்ய தேவையில்லை’ என்று கூறினேன். ஆனால் அவர்கள், ‘நாங்கள் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் ஆபத்தாகி விடும்’ என்று மிரட்டி வருகிறார்கள். எனவே என்னை ஏமாற்றி பணம் பறிந்த அந்த பெண் மற்றும் போலி மந்திரவாதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் என்னிடம் இருந்து வாங்கிய பணம் மற்றும் நகையை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.